Showing posts with label ஆதிபகவன். Show all posts
Showing posts with label ஆதிபகவன். Show all posts

Thursday, June 23, 2011

ஆதியாய் நின்றது மன்னவன் கோல்


ஆதியாய் நின்றது மன்னவன் கோல்


அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல் – (திருக்குறள் – 543)

என்ற குறளில் வரும் ‘ஆதியாய் நின்றது மன்னவன் கோல்’
என்ற சொற்றொடர் மிக்க பொருள் பொதிந்தது. பரிமேலழகர்
தன் உரையில் ‘ஆதியாய் நின்றது மன்னவன் கோல்’ என்பதற்கு
வேதமும் அறனும் அநாதியாயினும் செங்கோல் இல்வழி நடவா
ஆகலின், அதனை அவற்றிற்கு “ஆதி” என்றும் அப்பெற்றியே
தனக்கு ஆதியாவது பிறிதில்லை என்பார் “நின்றது” என்றும்
கூறினார்” என்று மிக, மிக குழப்பமாகப் பொருள்
செய்திருக்கிறார். ஆனால், மணக்குடவர் உரையில்
‘ஆதியாய் நின்றது’ என்பதற்கு முதலாக நின்றது அரசன்
செய்யும் முறைமை’ என்று சிறந்த பொருள் செய்திருக்கிறார்.
அவற்றையும் ஈண்டு காண்போம்! இது நிற்க!!

“ஆதியாய் நின்றது மன்னவன் கோல்” என்பதில் நின்றது
என்பது இறந்தக் காலத்தைக் குறித்து நின்றது. அக்குறிப்பை,
மணக்குடவர் மிக சரியாய் ‘முதலாக நின்றது அரசன்
செய்யும் முறைமை’ என்று பொருள் செய்து
உணர்த்தியிருக்கிறார். ஆதியாய் நின்றது எனும் போது
முதலாக நின்றது அல்லது அமைந்தது என்று தான் பொருள்
கொள்ளவேண்டும். அதனால், மன்னவனே அந்தணர்களையும்,
அவர்களின் அறத்தையும் தோற்றுவித்தான் அல்லது
அவற்றுக்குக் காரணமாக அமைந்தான் என்றுதான் இந்த
குறளுக்குப் பொருள் கொள்ள வேண்டும். என்னை?

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.

என்ற குறளில் ’அந்தணர் நூற்கும், அறத்திற்கும்’ என்ற
சொற்றொடரை ஆராய்வோம். பெரும்பாலோர், இச்சொற்றொடர்
வைதிகப் பிராமணர்களின் வேதத்தையும் அவற்றில் கூறப்பட்ட
அறத்தையும் குறிக்கிறது என்றுப் பொருள் கொள்கின்றனர்.
பிராமணர்களின் வேதங்கள் ரிக், யஜூர், சாம மற்றும்
அதர்வண என்பன.

பொதுவாக, வேதங்கள் அபௌருஷேயம்1 என்று அழைப்பார்கள்.
அபெளருஷேயம் என்றால் யாராலும் இயற்றப்பட்டதல்ல என்று
பொருள். யாராலும் இயற்றப்படவில்லை என்றால் மன்னவன்
எவ்வாறு அதற்கு முதலாகயிருந்திருக்க முடியும்? குறள் “ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்” என்று அழத்தம் திருத்தமாக கூறுகிறது.
அப்படியாயின் இங்கு கூறப்பட்ட அந்தணர் நூல் என்பதும் அறம்
என்பதும் வேறுப் பொருளைக் குறிக்கிறது என்பது திண்ணம்!
அவற்றையும் பார்ப்போம்!!

பரதச் சக்கரவர்த்தி

சமணச் சரித்திரத்தின் படி, இந்த யுகத்தின் முதல் சக்கரவர்த்தி
பரதர் ஆவார். இவர் ஆதி தீர்த்தங்கரரான ஆதிபகவன்
என்றழைக்கப்படும் ரிஷபதேவரின் முதல் மகன். இவருடைய
பெயராலேயே இப்பூமி (இந்தியா) பரத கண்டம் என்றும் பரத
க்ஷேத்திரம் என்றழைக்கப்படுகிறது. இவற்றைப் பற்றியக்
குறிப்பு பாகவதப் புராணத்திலும்2 கூறப்பட்டிருக்கிறது.

முதல் சக்கரவர்த்தி

சமணச் சரித்திரத்தின்படி, இந்த பரதரே3 இந்த யுகத்தில் முதல்
சக்கரவர்த்தியாவார்.

அந்தணர் என்போர் அறவோர்

சமணச் சரித்திரத்தின்படி, ரிஷபதேவர் தன் காலத்தில் மக்களை
அவர்கள் செய்யும் தொழிலைக் கொண்டு, மூன்று வர்ணமாக
க்ஷத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரர் என்று வகைப்படுத்தியிருந்தார்.
ரிஷபதேவர்க் காலத்திற்கு பின், பரதர் ஆட்சிக்கு வந்தார். இவரே
பிராமணர்க்4 குலத்தைத் உருவாக்கி நான்கு வர்ணங்களாக ஆக்கினார்.
இவர் பிராமணர்களை எவ்வாறு, எந்த வகையினால் உருவாக்கினார்
என்பதையும் பார்ப்போம்.

அந்தணர்கள் தோற்றம்5

பரதர், தன் தந்தையான இரிஷபதேவரின் அறவுரைகளை மக்கள்
எவ்வாறு கடைப்பிடிக்கிறார்கள் என்று பார்க்க நினைத்தார். அதற்கு,
தான் தன்னுடைய நாட்டு மக்களை பார்ப்பதற்கு
ஆவலாகயிருப்பதாகவும் அதனால், மக்கள் அனைவரும் தன்
அரண்மனைக்கு வரவேண்டும் என்று உத்தரவுப் பிறப்பித்தார்.
தன் நான்கு அரண்மணை வாயில்களிலும் வழி நெடுக முளைத்த
தானியங்களை இறைத்து வைக்கவும் உத்தரவிட்டிருந்தார். மக்கள்
தன் அரசனைப் பார்க்கவும், அந்த பெரிய அரண்மணையைப்
பார்க்கவும் நான்கு வாயில்களிலும் வரத் தொடங்கினார்கள்.
அவர்களுக்கு சிறந்த ஆடை அணிகலன்களைக் கொடுக்கும்படி
ஆணைப் பிறப்பித்திருந்தார். இவ்வாறு வெகு நாள்கள், மக்கள்
வந்துச் சென்றுக் கொண்டிருந்தார்கள். இவற்றையெல்லாம்,
பார்த்துக் கொண்டிருந்த பரத சக்கரவர்த்தி, வாயிற் காவலர்களை
அழைத்து, மக்கள் யாவரும் வந்தார்களா என்று வினவினான்.
அதற்கு அக்காவலர்கள், சிலர் மட்டும் அரண்மணைக்கு
வெளியேயே நின்று விட்டு போய்விட்டார்கள் என்பதையறிந்து,
அவர்களை தன்னை வேறொரு மாளிகையில் சந்திக்கும்படி
சொல்லியனுப்பினான். அவ்வாறே, அவர்களும் அம்மாளிகைக்கு
வந்திருந்தார்கள். பரத சக்கரவர்த்தி, ஏன் தன்னை அரண்மணையில்
சந்திக்க வரவில்லை என்று அம்மக்களை வினவினார். அதற்கு,
அரசே நாங்கள் தங்களை சந்திக்க ஒவ்வொரு நாளும் வரும்
போதும் அரண்மணை வாயில்களில் முளைத்த தானியங்கள்
இறைந்து கிடப்பதைப் பார்த்தோம். முளைத்தத் தானியங்களுக்கு
உயிர் உண்டு என்பதால், அவற்றிற்கு ஊறு விளைவிக்கக்கூடாது
என்பதால் தங்களை சந்திக்காமலே திரும்பி விட்டோம் என்று
பதில் கூறியதைக் கேட்ட பரத சக்கரவர்த்தி பெரிதும் உவகைக்
கொண்டு, நீங்கள், ஆதிபகவன்/ஆதிநாதர் பகர்ந்த அறத்தை
பிறழாமல் கடைப்பிடித்து வருவதனால், இன்று முதல் பிராமணர்கள்
என்று அழைக்கப்படுவீர்கள் என்றும் ஆதிபகவனால் அருளப்பட்ட
அறத்தை எக்காலமும் கடைப்பிடித்து ஒழுகவேண்டும் என்று
கேட்டுக் கொண்டார்.

இவர்களையே, தேவர் பெருமான் (குறளாசிரியர்)
“அந்தணர் என்போர் அறவோர்மற் எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டுஒழுக லான்” – குறள் (30)

என்று நமக்குக் காட்டியிருக்கிறார்.

முடிபு:

இக்குறளில் வரும் அந்தணர் நூற்கும் அறத்திற்கும் என்று
வருவது அறவோர்களைக் குறித்தும் மற்றும் அவர்களுடைய
செந்தண்மை பூண்டு ஒழுகும் அறத்தையும் குறிக்கிறது
என்பது அங்கை நெல்லிக்கனி. இதனால், பரத சக்கரவர்த்தியே
ஆதியாய் நின்ற மன்னன் என்பது வெள்ளிடை மலை.

என்னை?

இரா.பானுகுமார்,
சென்னை

அடிக்குறிப்புகள்:
1 - http://www.tamilhindu.com/2008/07/special-feature-vedam/

2 - http://www.krishnamurthys.com/profvk/VK2/SBAB7.html
[..The story of JaDa-Bharata
The history of Priyavrata, the first son of Manu Svayambhuva,
is taken up in the fifth skanda. Privrata’s son was Agnidhra
and his son was Nabhi. Nabhi was a great and devout ruler
and to him was born another avatar of Mahavishnu, by name
Rishabha. Rishabha, also called Rishabhadeva had 100 sons
of whom the eldest was Bharata whose story we are going to
see elaborately.
(Incidentally it is this Bharata after whom this country
was called BhArata-varsha; before that it was called aja-nAbha varsha)…]

3 - http://en.wikipedia.org/wiki/Chakravartin
The list of 12 Chakravartins as per Jainism is as follows:[10]
1. Bharata - Lord Rishabha's son.
2. Sagara - Anscestor of Bhagiratha as per Hindu puranas.
3. Maghavan
4. Sanatkumara
5. Shantinath - (also a Tirthankara)
6. Kunthunath - (also a Tirthankara)
7. Aranath - (also a Tirthankara)
8. Subhauma
9. Padmanabha
10. Harishena
11. Jayasena
12. Brahmadatt
In Jainism, a chakravartin was characterized by possession of
saptaratna, that is, the seven jewels, consisting of, charka,
queen, chariot, jewel, wealth, horse, and elephant.
Additionally, the list also included a prime minister and
a son (navaratna). A chakravartin is considered an ideal
human being endowed with thirty-two major signs of excellence
and many minor signs of excellence.

4 - http://en.wikipedia.org/wiki/Kshatriya (Jaina origin)

5 – ஸ்ரீ புராணம்

Thursday, March 13, 2008

ஆதிபகவன் அருகனைக் குறிக்கும்!

ஆதிபகவன் அருகனைக் குறிக்கும்!
- மஞ்சை வசந்தன்

கடவுள் வாழ்த்து என்பது சரியா?

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு - திருக்குறள் (1)

எழுத்துக்களில் எல்லாம் ‘அ’ என்னும் எழுத்தை முதலாக உடையன. அதுபோல், உலகம் ஆதிபகவனைக் முதலாகவுடையது என்று கடவுள் நம்பிக்கையாளர்கள் கருத்துக் கூறுகிறார்கள். ஆதிபகவன் என்பதற்கு கடவுள் என்று சிலரும், இறைவன் என்று சிலரும் பொருள் கூறி முறையே, கடவுள் வாழ்த்து என்றும் இறை வாழ்த்து என்றும் இந்த அதிகாரத்திற்குத் தலைப்பு சூட்டியுள்ளனர்.

ஆனால், இவ்வதிகாரத்திலுள்ள குறட்பாக்களை நுட்பமாக ஆய்வு செய்தால், இவ்வாறு பொருள் கொள்வது சரியன்று என்பது தெளிவாக விளங்கும்.

இதே அதிகாரத்தில்,

“தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது - திருக்குறள் (7)

தனக்கு உவமை இல்லாதது கடவுள் (இறை) என்றால் உவமையில்லாத கடவுளுக்கு “அ” எழுத்தை உவமை சொல்லி, முதல் குறள் எப்படி அமைக்கப்பட்டிருக்க முடியும்? அவ்வாறு அமைக்கப்பட்டிருப்பின் அது மேற்கண்ட குறளுக்கு முரண் அல்லவா? அப்படியென்றால், உவமையில்லாத கடவுளுக்கு உவமை கூறி, முதல் குறள் அமைக்கப்பட்டிருக்க முடியாது என்பது உறுதியாகிறது.

அதன்படி நோக்கின் முதல் குறளுக்கு உண்மையான வேறு பொருள் இருக்க வேண்டும். அந்த உண்மைப் பொருள் என்னவாக இருக்கும்? அதை அறிய, ஆதிபகவன் கடவுளைக் குறிப்பதா? அல்லது வரலாற்றில் வாழ்ந்த தலைவரைக் குறிப்பதா? என்பதை முதலில் உறுதி செய்து கொள்ளவேண்டும். வரலாற்றுச் சான்றுகளின் படியும், ஆதிபகவன் என்பவர் முதலாம் தீர்த்தங்கரராகிய அருகதேவர் (இடபதேவர்) ஆவார். அவருக்குப் பின் 23 தீர்த்தங்கரர்கள் இருந்தமையால், முதல் தீர்த்தங்கரர் ஆகிய இடபதேவருக்கு “ஆதிபகவன்” என்று பெயர் வந்தது. இது வரலாற்று உண்மை.

இவர்தான் முதன் முதலில் உலகுக்கு எழுத்துக்களைக் கற்பித்தார் என்பது சமணக் கொள்கை. அதன்படி நோக்கின், ‘அ’ என்ற எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்ட அனைத்து எழுத்துக்களும், ஆதி பகவனை மூலமாகக் கொண்டவை என்பது பொருள்.

அதாவது ‘அ’ முதலிய எழுத்துக்கள் எல்லாம் ஆதிபகவனை முதலாக உடையன “ஆதி பகவனிடமிருந்து வந்தவை) என்பதுதான் இக்குறளுக்குப் பொருள். இதுவே சரியான பொருள். அப்படிப் பொருள் கொள்ளும் போது, முரண் ஏதும் இல்லாத, வரலாற்றுக்கிசைந்த, சான்றுகளுடன் கூடிய பொருளாக அது அமையும். இங்கு ஏழாம் வேற்றுமை உருபு தொக்கி நிற்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.

ஆக, இக்குறளுக்கு உலகில் அகரத்தை முதல் எழுத்தாகக் கொண்ட எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஆதிபகவனிடம் தோன்றியது என்பதே சரியான பொருள் ஆகும். அதாவது, உலகுக்கு அறிவை வழங்கியவர் ஆதிபகவன் என்பது இக்குறளின் நுண்பொருள்.

எழுத்துக்களையும், எண்களையும், உழவித் தொழிலையும், உலகுக்குக் கொடுத்தவர் (கற்பித்தவர்) ஆதிபகவன் என்பது சமணர் கொள்கை. இம்மூன்றும் அவரே மூலகர்த்தாவாகக் கொள்ளப்பட்டார். அவரே எண்ணின் மூலம், அவரே எழுத்தின் மூலம். அவரே உழவின் மூலம் என சமணர்களால் போற்றப்பட்டவர் என்பதை ஆய்வில் கொள்ளவேண்டும்.

பரிமேலழகர் போன்ற உரையாளர் இக்குறளுக்கு உரை எழுதும் போது, ஏனைய எழுத்துக்களுக்கெல்லாம் ‘அ’ எழுத்தே அடிப்படை; அதிலிருந்தே மற்றய எழுத்துக்கள் பிறக்கின்றன. அதுபோல், கடவுள் உலகத் தோற்றத்திற்கு அடிப்படை என்று பொருள் கொள்கின்றனர். இவ்வாறு பொருள் கொள்வது முற்றிலும் சரியன்று.

காரணம், எழுத்துக்களின் முதல் எழுத்துத் தான் ‘அ’ எழுத்தே தவிர, மற்ற எழுத்துக்களின் தோற்றத்திற்கு ‘அ’ எழுத்து அடிப்படையானதன்று.‘உ’ என்ற எழுத்துக்கு ‘அ’ எழுத்து எப்படி அடிப்படையாக அமைய முடியும். ‘உ’ எழுத்து தோன்ற ‘அ’ எழுத்து அடிப்படையாக அமைவதில்லை.

“அகரம் ஏனைய எல்லா எழுத்துக்களோடும் நுண்ணியதாக கலந்தும், எல்லா மெய் எழுத்துக்களையும் இயக்கியும் நிற்றல் போல், இறைவனும் உலகிற்கு முந்தியும் உயிருக்குயிராயும், உயிரற்ற பொருட்களையெல்லாம் இயக்கியும் நிற்பவன்” என்பது இக்குறளின் பொருள் என்கிறார். பாவாணரின் இக்கருத்து முற்றிலும் சரியன்று.

‘உ’ எழுத்தில் ‘அ’ எழுத்து எங்ஙனம் நுண்ணியதாகக் கலந்திருக்க முடியும்?
‘அ’ என்பதும் உயிர் எழுத்து.
‘உ’ என்பதும் உயிர் எழுத்து.

இரண்டும் தனித்து நிற்கவல்லன. அதன் காரணம் பற்றியே அவை உயிர் எழுத்து எனப்பெயர் பெற்றன. ஒர் உயிர் இன்னொரு உயிருடன் கலவாது. உயிர் மெய்யுடன் மட்டுமே கலக்கும். ஒவ்வொரு உயிரும் மெய்யெழுதுடன் சேர்ந்து உயிர் மெய்யெழுத்தை உருவாக்கும். அப்படியிருக்க ‘அ’ எழுத்து எல்லா எழுத்துக்களிலும் நுண்ணியதாய்க் கலந்திருப்பதாகக் கொள்வதும்; கூறுவதும் எப்படிச் சரியாகும்?

‘இ’ என்ற எழுத்தை எப்படி உச்சரித்தாலும் ‘அ’ ஒலி நுண்ணியதாய்க் கலப்பதை; கலந்திருப்பதை அறிய முடியவில்லையே.
க்+அ=க என்று சொல்லும்பொழுது ‘க’ எழுத்தில் ‘அ’ கலந்துள்ளது வெளிப்படும். ஆனால், ‘இ’ எழுத்தில் ‘அ’ கலந்துள்ளதை எவ்வாறு புலப்படுத்த இயலும்? அல்லது எவ்வாறு புரிந்துக் கொள்ள இயலும்?

எந்தவொரு எழுத்தையும் உச்சரிக்கும் போது வாய் திறந்திருக்கிறோம். வாய்த் திறந்தாலே அங்கு ‘அ’ என்பது நுண்ணியமாய் ஒலிக்கும். எனவே, எல்லா எழுத்துக்களிலும் ‘அ’ நுண்மையாகக் கலந்துள்ளது என்று கூறலாம் எனச் சிலர் கருதுவர். அங்காந்த வாயே அகரத்தின் இடமாயினும் (தொல்காப்பியப்படி), வாய்ந்திறந்தாலே ‘அ’ ஒலிப்பதாகத் தோன்றும். ஆனால், அது உண்மையல்ல. எழுத்தை நினையாது வாய்த்திறந்து பார்த்தால், ‘அ’ ஒலிப்பதைத் தோன்றிய தோற்றங்கூட இருக்காது.
வாய்த்திறப்பதால் ஒலி எழுவதில்லை. அணு அளவாவது ஒலிப்பதற்குரிய முயற்சி மேற்கொண்டால் தான் ஓசை எழும். இல்லையேல் எழாது என்பதே உண்மை. வாய்த்திறந்து ஆய்வு செய்து பார்த்தால் இந்த உண்மையை அறியலாம்.

“நிறையுயிர் முயற்சியி னுள்வளி துரப்ப
எழுமணுத் திரளுரங் கண்டம் உச்ச
மூக்கற் றிதழ்நா பல்வணத் தொழியின்
வெவ்வேறு எழுத்தொலியாய் வரங்பிறப்பே”
- நன்னூல்

எனவே, ‘அ’ எழுத்து எல்லா எழுத்துக்களிலும் நுண்ணியதாய்க் கலந்திருப்பதாகக் கூறுவது சரியன்று.

அதன் வழி நோக்கின், ‘அ’ எழுத்து எல்லா எழுத்துக்களுக்கும் மூலமாக அமைவதாய்ப் பொருள் கூறுவது பொருந்தாது.
அதேபோல் ஆதிபகவன் என்பதை இரு பெயரெட்டுப் பண்புத் தொகை என்று பரிமேலழகர் கொள்வதும் சரியன்று.
அதாவது, ஆதி எனினும் கடவுள், பகவன் எனினும் கடவுள் எனவே, கடவுளைக் குறிக்கும் ‘ஆதி’ என்ற பெயரும் பகவன் என்ற பெயரும் ஒட்டி ஆதிபகவன் ஆயிற்று எனப்து பரிமேலழகர் விளக்கம்.

இது பெயரொட்டுப் பண்புத்தொகை என்பது ஒரே பண்பை கொண்ட இரு சொற்கள் ஒட்டி இருந்தால் மட்டுமே பொருந்தும்.
எடுத்துக்காட்டாக ‘சாரைப்பாம்பு’ சாரையன்றாலும் பாம்பு என்றாலும் ஒன்றேயாகும். இங்கு சாரை, பாம்பு என்று சொற்கள் ஒட்டி இரு பெயரொட்டு பண்புத்தொகை ஆகும்.

ஆனால், ‘ஆதிபகவன்’ எனபதில் ஆதி என்பதும் பகவன் என்பதும் வெவ்வேறு சொற்கள். ஆதிமூலம் இரு பெயரொட்டு பண்புத்தொகையாகின்றன. ஆனால், ஆதிபகவன் என்பதில் ஆதி என்பதற்குப் பொருள் வேறு. பகவன் என்பதற்குப் பொருள் வேறு.ஆதியாகிய பகவன் என்று அது விரியாது. காரணம், ஆதிபகவன் என்பது காரண இடுகுறிப் பெயராய் அமைந்து, ஒரு பெயராய் ஆனதாகும்.

மேலும் பரிமேலழகர், பதவுரை கூறும்போது ஆதி பகவனாகிய என்று விரித்துப் பண்புத் தொகையாக்குகிறார். கருத்துக் கூறும்போது ஆதியாகிய பகவன் என்று விரித்து இரு பெயரொட்டுப் பண்புத் தொகையாக்குகிறார். இது வன்மையான கண்டனத்திற்குரியது.

இவ்வாறு ஏன் அவர் செய்கிறார் என்றால், ‘ஆதி பகவன்’ என்பதை இரு பெயரொட்டு பண்புத்தொகையாக்குவதன் மூலம், ஆதிபகவன் என்ற சொல்லைக் கடவுளுக்குப் பொருத்திக் காட்டலாம் என்பதற்காகவே, அதாவது, ஆதி என்றாலும் கடவுள், பகவன் என்றாலும் கடவுள், கடவுளைக் குறிக்கும் இவ்விருப் பெயர்களும் ஒட்டி ஆதிபகவன் ஆயிற்று என்று கூறுவதன் மூலம், இக்குறளைக் கடவுள் மயமாக்கிவிடலாம் என்ற முயற்சிதான். ஆனால், இது தவறு என்பதை விளக்குவதற்காகத்தான் மேலே விரிவாக விளக்கினேன்.

இருபெயரொட்டுப் பண்புத் தொகையென்றால் ஆதிப்பகவன் என்று இருக்கவேண்டும். காரணம் இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லெழுத்து மிகும். ஆனால், குறளில் ஆதிபகவன் என்றெ உள்ளது. ஆகவே, அது இருபெயரொட்டுப் பண்புத்தொகை அல்ல என்பது உறுதி செய்யப்படுவதை அறிய வேண்டும்.

ஆதிபகவன் என்றால் வாழ்ந்த தலைவர்களுள் ஆதியானவர் என்பது மட்டுந்தான் பொருளேயன்றி, அவர் உலகத்திற்கு மூலமானவர் அல்ல.எனவே, ஆதிபகவன் என்பது வரலாற்றில் வாழ்ந்த அருகதேவருக்குப் பொருந்துவதேயன்றி, புலனாகாத கடவுளுக்குப் பொருந்துவதன்று.

மேலும், எழுத்துக்கள் உருவானது அருக தேவனாகிய ஆதிபகவனிடம் என்று பொருள் கொள்ள ஆதாரங்கள் உள்ளன.

“விறுப்புறு பொன்எயிற்குள்
விளங்குவெண் ணெழுத்திரண்டும்
பரப்பிய ஆதிமூர்த்தி”

என்று மண்டல புருடர் தம் “சூடாமணி நிகண்டில்” 4ஆவது தொகுதியிலும்,

“கோதில்வருகன் திகம்பரம் எண்குணன் முக்குடையோன்
ஆதிபகவன் அசோகமர்ந்தோன் அறவாழி அண்ணல்”

என்று கயாதர நிகண்டிலும், அருகதேவரே ஆதிபகவன் என்பதும், அவரே எழுத்துக்களை உலகிற்குக் கற்பித்தார் என்பதும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

அது மட்டுமின்றி, முதல் அதிகாரத்தில் குறிக்கப்பட்டுள்ள ‘எண்குணன்’, ‘ஆதிபகவன்’, ‘அறவாழி அந்தணன்’ என்பவை அருகதேவரையே குறிப்பன என்பதையும் மேற்கண்டவர்கள் உறுதி செய்கின்றனர்.

மேலும், “ஆதிபகவனை அருகனை” என திருக்கலம்பகம் (செய்யுள் 109) சுட்டுகிறது. எனவே ஆதிபகவன் என்பது அருகதேவரையே குறிக்கிறது என்பது அய்யத்திற்கிடமின்றித் தெளிவாகின்றது.

எனவே முதல் குறளுக்கு, உலகில் அகரத்தை முதலாகவுடைய எழுத்துக்கள் எல்லாம் ஆதிபகவனிடமிருந்து தோன்றியவை என்பதே பொருள். அறிவை உலகிற்குத் தந்தவர் ஆதிபகவன் என்பதே அதன் உட்பொருள்.

முற்றும்.


(இக்குறளுளைப் பற்றிய என் பார்வையைப் பிறகு எழுதுகிறேன்)


இரா.பானுகுமார்,
சென்னை.